வீடுகளில் விளக்கு ஏற்றும் முறை.. வறுமை நீங்கி பணம் பெருக்குவதற்கு இதை செய்யுங்க

வீடுகளில் விளக்கு ஏற்றுவது என்பது பண்டைய காலம் தொட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. நம் வீடுகளில் மாலை நேரங்களில் தினமும் விளக்கு ஏற்றுவதன் மூலம் பில்லி, சூனியம் போன்ற பல துஷ்ட சக்திகள் நம்மை நெருங்காமல் இருக்கும்.

அப்படி நாம் நம் வீடுகளில் விளக்கு ஏற்றி கடவுளிடம் பிரார்த்திக்கும் போது அது அப்படியே நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றும் என்பது ஐதீகம். அப்படி நாம் நினைத்த வேண்டுதல்கள் நிறைவேற சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அதில் முக்கியமானது வீடுகளில் விளக்கு ஏற்றும் முறை. நாம் பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது அந்த விளக்கை வெறும் தரையில் வைக்கக் கூடாது.

குத்துவிளக்கு, குபேர விளக்கு, காமாட்சி அம்மன் விளக்கு என்று எதுவாக இருந்தாலும் தரையில் வைத்து ஏற்றக் கூடாது என்பது ஐதீகம்.

அதனால் அந்த விளக்குகளை ஒரு சிறிய தட்டில் வைத்து அதன் மீது தான் ஏற்ற வேண்டும். அது தான் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் சாஸ்திரம்.

அதுவே குத்துவிளக்காக இருந்தால் ஒரு வாழையிலையில் பச்சரிசியைப் கொட்டி அதன் மீது குத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

அதேபோன்று காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும்போது பித்தளை தட்டு அல்லது பஞ்சலோகத்தால் ஆன தட்டின் மீது வைத்து தான் ஏற்ற வேண்டும். அப்போதுதான் நமக்கு சரியான பலன்கள் கிடைக்கும்.

மேலும் அந்த விளக்கை ஏற்றும் முன்பு சிறிதளவு அரிசி, உளுந்து, துவரை போன்ற பொருட்களை தட்டில் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கை வைத்து ஏற்றினால் வறுமை நீங்கி பணம் பெருகும்.

தீபம் ஏற்றும்போது தெற்கு திசை தவிர மற்ற திசைகளில் தீபஜோதி எரியும்படி இருக்க வேண்டும். ஏனென்றால் தெற்கு நோக்கி தீபம் எரிவது அவ்வளவாக நல்லது கிடையாது.

அதேபோன்று செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வீடு முழுவதும் சாம்பிராணி புகை பரவ விட்டால் கெட்ட சக்திகள் அண்டாது என்பது முன்னோர்கள் கருத்து.

மேலும் சில கிராமங்களில் மாலை நேரங்களில் தினமும் வீட்டின் நிலைப்படியில் விளக்கு ஏற்றுவார்கள். இதன் மூலம் ஸ்ரீதேவி வீட்டுக்குள் வரும் என்பது ஐதீகம்.

மேற்கூறிய இந்த முறைகளை நாம் தொடர்ந்து செய்து வந்தால் நம் வீட்டில் பணப் பிரச்சனை இருக்கவே இருக்காது. மேலும் மன குழப்பம், சண்டை, சச்சரவு போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.