இப்படி ஒரு குழம்ப நீங்க எங்கயும் கேள்விபட்டிருக்க மாட்டீங்க.. சுவையான அப்பள குழம்பு செய்வது எப்படி.?

என்னது இதுக்கு பேரு அப்பளக் குழம்பா, இது மாதிரி பேரை நம்ம இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே. நம்ம கேள்விப் பட்டது எல்லாம் காரக்குழம்பு, வத்தக்குழம்பு , மிளகு குழம்பு மிஞ்சி மிஞ்சி போனா சாம்பார் இது மாதிரி தான். இது என்ன புது பேரா இருக்குன்னு உங்களுக்கு தோணலாம். ஆனா இது சட்டுன்னு செய்ய கூடிய ஒரு குழம்பு. இதை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள் :

சோவி அப்பளம் (அல்லது) சின்னதா இருக்கக்கூடிய மிளகு அப்பளம்

கடுகு 1 ஸ்பூன்

சின்ன வெங்காயம் 15

தக்காளி 2

மஞ்சள் தூள் தேவையான அளவு

கருவேப்பிலை சிறிதளவு

மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

தேங்காய் அரை மூடி

புளிக்கரைசல் 100 ml

செய்முறை :

முதலில் ஒரு கடாயை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி நன்கு எண்ணெய் சூடு வந்த பிறகு மிளகு அப்பளத்தை நன்கு சிவக்க பொரித்து எடுத்தால் குழம்பு ருசியாக இருக்கும். பொரித்து எடுத்து பின் அது தனியாக இருக்கட்டும் .

அதன் பின் மற்றொரு கடாயை எடுத்து எண்ணெய் ஊற்றி கடுகை பொரிய விடவும், பொரிந்த உடன் சின்ன வெங்காயத்தை எண்ணெயில் போட்டு வதக்கி அத்துடன் கையோடு கருவேப்பிலை ஒரு கொத்து போட்டு வெங்காயம் பொன்னிறமாகும் அளவுக்கு நன்றாக வதக்க வேண்டும் .

பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிய உடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்தவுடன் அரை மூடி அளவிற்கு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்துக்கொண்டு அதனுடன் மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கவும்.

பின்னர் 100 மில்லி புளித்தண்ணீர் சேர்க்க வேண்டும். குழம்பு நன்கு கொதித்த பின் அதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

கடைசியில் நாம பொறித்து வைத்த மிளகு அப்பளத்தை அதில் போட்டு கரண்டியால் லேசாக கிளறவும். இப்பொழுது சுவையான அப்பள குழம்பு தயார். இந்த ரெசிபியை உங்கள் வீட்டிலும் செய்து பார்த்து மகிழுங்கள்.