ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாக்கும் ஆவாரம் பூ.. நமக்குத் தெரியாத தகவல்கள்

கிராமப்புறங்களில் சாலையோரத்தில் இந்த ஆவாரம்பூவை நாம் அதிக அளவில் காண முடியும். சில குறிப்பிட்ட காலங்களில் பூக்க கூடிய இந்த ஆவாரம் பூவுக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கிறது.

நம் சரும அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதில் இந்த ஆவாரம்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த ஆவாரம் பூவின் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இங்கு காண்போம்.

இந்த ஆவாரம் பூவை நன்றாக நிழலில் உலர்த்தி காயவைத்து பின்பு பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியை நீரில் கொதிக்க வைத்து தேநீராக நாம் குடிக்கலாம்.

இதன் மூலம் நீரிழிவு, மலச்சிக்கல் போன்றவற்றிற்கு தீர்வு கிடைக்கும். வெயில் காலத்தில் இந்த தேநீருடன் சிறிது தேன், ஏலக்காய் கலந்து குடித்தால் வறட்சி நீங்கும்.

இந்த ஆவாரம் பூவில் செய்யப்படும் தேநீர் சிறுநீர் எரிச்சல், சிறுநீரகக் கல் போன்றவற்றில் இருந்தும் நமக்கு தீர்வு கொடுக்கும். உடலில் இருக்கும் கொழுப்பை குறைப்பதற்கும் இது உதவுகிறது.

தற்போது பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படும் மார்பக புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது. நமக்கு காய்ச்சல் அதிகமாக இருக்கும் சமயத்தில் இந்த ஆவாரம் பூவை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குடித்து வருவதன் மூலம் உடலில் வெப்பம் குறைக்கப்படுகிறது.

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியைப் போக்குவதற்கு இந்த ஆவாரம்பூ பெரிதும் உதவுகிறது. இந்த ஆவாரம் பூ பொடியை மாதவிடாய் நாட்களில் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் வயிற்று வலி சரியாகும்.

இந்த ஆவாரம் பூவுடன் சிறிது பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போன்று செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும். இப்படி ஆவாரம்பூ உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் அழகையும் பாதிக்கிறது.

சருமத்தில் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்ய இந்த ஆவாரம்பூ நமக்கு உதவுகிறது. நமக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் இந்த ஆவாரம் பூ, வேர் மற்றும் இலைகளை நீரில் கொதிக்க வைத்து இளம் சூடாக அந்த காயத்தின் மேல் கழுவி வந்தால் காயம் விரைவில் ஆறும்.

மேலும் கை கால் பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டு இருந்தால் இந்த ஆவாரம்பூ பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து ஒத்தடம் கொடுத்தால் வீக்கம் குறையும்.

பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் இந்த ஆவாரம் பூ பொடியுடன் வெந்தயம் மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து அரைத்து தலையில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு சாதாரணமாக நாம் பயன்படுத்தும் ஷாம்புவை கொண்டு தலை குளித்தால் பொடுகு தொல்லையிலிருந்து தீர்வு கிடைக்கும்.

இந்த ஆவாரம் பூ விதைகள் மற்றும் கரிசலாங்கண்ணி இலைகளை சேர்த்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி அந்த எண்ணெயை தலைக்குத் தடவி வந்தால் இளநரை நீங்கும்.

ஆவாரம்பூ, பாசிப்பயறு, கடலை பருப்பு, ரோஜா இதழ்கள் ஆகியவற்றை நன்றாக காய வைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். இந்தப் பொடியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடலில் தேய்த்து குளித்து வந்தால் சருமம் மினுமினுப்பாகும்.

அதிலும் பெண்கள் இந்த பொடியுடன் கஸ்தூரி மஞ்சள் பொடியையும் சேர்த்து பயன்படுத்தி வந்தால் இயற்கையான அழகு மிளிரும்.

இப்படி இயற்கையாகவே மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய இந்த ஆவாரம்பூவை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நம் ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் நல்லது.